சோனாபத்ரா: உத்தரப் பிரதேச மாநிலத்தின் சோனாபத்ரா மாவட்டத்தில் இளையர் ஒருவரைத் தாக்கிய மின்சாரத்துறை ஊழியர் அவரைத் தன் காலணியை நாக்கால் சுத்தம் செய்யவைத்த கொடுஞ்செயல் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட இளையர் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரா என்று கூறப்பட்டது. ராஜேந்திராவின் தாய் மாமன் வீட்டில் மின்தடை ஏற்பட்டதாகவும் அதன் தொடர்பிலான பிரச்சினையில் மின்துறை ஊழியர் தேஜ்பாலி சிங் ராஜேந்திராவைக் கடுமையாகத் தாக்கியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தேஜ்பாலி சிங்மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடைபெறுவதாக அது கூறியது.
சம்பவம் தொடர்பில் இணையத்தில் பரவிய காணொளியில், மரக்கட்டிலில் அமர்ந்திருக்கும் ஆடவர் காலை நீட்டிக்கொண்டிருப்பதும் இளையர் ஒருவர் ஆடவரின் செருப்பை நாக்கால் சுத்தம் செய்வதும் இடம்பெற்றுள்ளது. பின்னர் அந்த இளையர் காதுகளைப் பிடித்தபடி தான் செய்தது தவறு என்று கூறியபடி தோப்புக் கரணம் போடும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
மற்றொரு காணொளியில் ஆடவர் இளையரின் கையை முறுக்கிக் கீழே தள்ளித் தாக்கியது பதிவாகியுள்ளது.
கொடூரமான இச்சம்பவம் பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.