சென்னை: இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடப்பிதழைப் பெற்ற இலங்கை தம்பதியர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகள் வழக்கமான குடிநுழைவுச் சோதனைகளை எதிர்கொண்டனர்.
அப்போது இலங்கையைச் சேர்ந்த 33 வயதான ரமலான் சலாம் என்ற ஆடவரின் கடப்பிதழை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இலங்கையைச் சேர்ந்த அவரால் எவ்வாறு இந்திய கடப்பிதழைப் பெற முடிந்தது என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் தன் மனைவிக்கும் இரு குழந்தைகளுக்கும் இந்திய கடப்பிதழ் பெற்றிருப்பதும் அதிகாரிகளின் சந்தேகத்தை வலுக்கச் செய்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு தாம் இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும் பின்னர் இலங்கைக்கு திரும்பிச் செல்லாமல் சென்னையிலேயே தங்கிவிட்டதாகவும் விளக்கம் அளித்தார் ரமலான் சலாம். மேலும், முறைப்படி விண்ணப்பித்து இந்தியாவில் வழங்கப்படும் ஆவணங்களைப் பெற்றதாகவும் அவர் கூறினார்.
எனினும், அவரது விளக்கத்தை குடியுரிமை அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்தியாவில் வசித்தாலும் ரமலானும் அவரது குடும்பத்தாரும் இலங்கை குடிமக்களாகவே கருதப்படுவர் என்றும் அவர் உண்மையை மறைத்து இந்திய அரசு வழங்கும் அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளார் என்றும் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, ரமலானும் அவரது குடும்பத்தாரும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.