திருப்பதி: திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள தேவஸ்தான நிர்வாகம் கைத்தடி கொடுத்து அனுப்பி வைக்கிறது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பதி கோவிலுக்கு ஒரு குடும்பம் மலைப்பாதையில் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தபோது அந்த குடும்பத்திற்கு முன் வேகமாக படிக்கட்டுகளை ஏறிய 6 வயது சிறுமி ஒருவர் சிறுத்தை தாக்கி பலியானார். அந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுததியது.
இந்நிலையில், மேலும் ஒரு சிறுத்தையை மக்கள் மலைப்பாதைகளில் பார்த்ததாக கூறியுள்ளனர். இதனால் மலைப்பாதையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அச்சமடைந்து வரும் நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
“நூறு பேர் கொண்ட குழுவாக மாலைப்பாதையில் செல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு கைத்தடி தரப்படும். குழுவுக்கு ஒரு பாதுகாவலர் அனுப்பபடுவார். மிருகங்கள் நடமாடும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் காவலுக்கு இருப்பார்கள்,” என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மலைப்பாதைகளில் 500 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அது கூறியது.