புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் அண்மையில் நடந்த ஜி20 உச்சநிலை மாநாட்டை வெற்றிகரமான ஒன்றாக ஆக்க அரும்பாடுபட்ட அனைவரையும் சிறப்பிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.
இதனையொட்டி புதுடெல்லி காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுடன் அவர் இரவு விருந்தில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
உச்சநிலை மாநாட்டின்போது அருமையாக பணியாற்றிய புதுடெல்லி காவல்துறை அதிகாரிகளின் விவரங்களை காவல்துறை ஆணையர் சஞ்சை அரோரா திரட்டி வருகிறார் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் பட்டியலில் 450 பேர் இடம்பெற்று இருப்பார்கள் என்றும் அவர்களும் காவல்துறை ஆணையரும் ஜி20 உச்சநிலை மாநாடு நடந்த பாரத் மண்டபத்தில் பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஒரு பெரும் சாதனை நிகழ்த்தப்படும்போது அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சிறப்பிப்பது பிரதமர் மோடியின் வழமை.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறந்து வைக்கப்பட்ட பிறகு கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த உடலுழைப்பு ஊழியர்களைப் பிரதமர் மோடி சிறப்பித்தார்.