புராம்ப்டன்: கனடாவின் ஒன்டாரியோ மாநிலம், புராம்ப்டன் நகரில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக 19 முதல் 26 வயதுக்குட்பட்ட சீக்கிய இளையர்கள் எண்மர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக பீல் பிராந்திய காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், புராம்ப்டன் நகரின் டோனால்டு ஸ்டீவாா்ட் சாலை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில் 9 செ.மீ. பெரெட்டா கைத்துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்துக்காக ஜக்தீப் சிங், 22, ஏகம்ஜோத் ரந்தவா, 19, மஞ்சிந்தா் சிங்(26), ஹா்பிரீத் சிங்(23), ரிபன்ஜோத் சிங்(22), ஜப்பான்தீப் சிங்(22), லவ்பிரீத் சிங்(26), ராஜன்பிரீத் சிங்(21) ஆகிய எண்மர் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் புராம்ப்டனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
கனடாவில் சீக்கியத் தலைவர் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் பங்கிருப்பதாக அந்நாட்டுப் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசியதையடுத்து, இருநாட்டு அரசதந்திர உறவில் மோதல் நிலவும் சூழலில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.