புதுடெல்லி: விமான வாயிலில் பாரா திடல்தட வீராங்கனையான சுவர்ணா ராஜ் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலியை விமானப் பணியாளர்கள் அவரிடம் கொடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், அந்த வீராங்கனை சிரமத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக, இண்டிகோ விமான நிறுவனம் சுவர்ணா ராஜிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
இந்திய பாரா திடல்தட வீராங்கனை சுவர்ணா ராஜ் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை சென்றார். விமானம் தரையிறங்கிய நிலையில், விமான வாயிலில் அவர் வெளியேறியபோது, அவருக்குச் சொந்தமான சக்கர நாற்காலியை அவரிடம் விமானப் பணியாளர்கள் தரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அந்த சக்கர நாற்காலி சேதம் அடைந்த நிலையில் அவரிடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வேதனை தெரிவித்த சுவர்ணா ராஜ், விமான நிறுவனத்திடம் புகார் அளித்தார். ரூ.3 லட்சம் மதிப்புள்ள தனது சக்கர நாற்காலி சேதம் அடைந்ததற்கு விமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், அந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து விமான நிறுவனம் சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “இந்தப் பிரச்சினையை விரைந்து தீர்ப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். சுவர்ணா ராஜிடம் பேசி வருகிறோம். வாடிக்கையாளர் அனுபவத்தில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறோம். அவருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” எனக் கூறப்பட்டிருந்தது.