தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளில் நியூஸ் 18 குழுமம் கருத்துக்கணிப்பு நடத்தியது. கருத்துக்கணிப்பின் முடிவுகளை அந்தக் குழுமம் பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் 12 மாநிலங்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளை வியாழக்கிழமை (மார்ச் 14) மாலை 6 மணி முதல் அது வெளியிட்டது.
அசாம் மற்றும் ஒடிசாவில் பெருவாரியான இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும் மாநிலங்களில் ஒன்றான 25 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ராஜஸ்தானில் பாஜக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 61% வாக்குகளும் காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கு 33% வாக்குகளும் மற்ற கட்சிகளுக்கு 6% வாக்குகளும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சிபுரியும் கர்நாடகாவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
பாஜக ஆளும் குஜராத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தை காங்கிரசின் கை சின்னம் நெருங்கவே முடியாது என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. அந்த மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் உள்ள 26 இடங்களையும் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஓர் இடம்கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 25 இடங்களிலும் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஓர் இடத்தில்கூட வெற்றி வாய்ப்பு இருக்காது என்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
“காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 8 இடங்களும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைக்கும். சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும்,” எனவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஒரே ஒரு தொகுதியிலும் வெல்லும் என்று கூறப்பட்டது.