புதுடெல்லி: தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர்கள் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன என்ற விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ வங்கி சமர்பித்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் தனது இணையத் தளத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதில் ‘ஃபியூச்சர் கேமிங் & ஹோட்டல் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் மட்டும் இந்தியாவிலேயே ஆக அதிகமாக ரூ.1,368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதேபோல் மேகா இன்ஜினியரிங் & இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்(ரூ.966 கோடி), குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் (ரூ 410 கோடி), வேதாந்தா லிமிடெட் (400 கோடி), ஹால்டியா எனர்ஜி லிமிடெட் (ரூ.377 கோடி), பாரதி குழுமம் (ரூ.247 கோடி) உட்பட குறைந்தது பத்து நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளன.
ஆக அதிகமாக தேர்தல் பத்திரங்களை வாங்கிய (ரூ.1,368 கோடி) லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டினின் ‘ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ்’ நிறுவனம், இரண்டு பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.17,000 கோடி) அதிகமான விற்று முதலுடன் இந்தியாவில் லாட்டரி துறை விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.
தமிழ்நாட்டின் கோவை நகரில் பதிவு செய்யப்பட்ட ‘பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் இந்தியா’ என்ற துணை நிறுவனம், சிக்கிம் அரசுடன் ஒப்பந்தம் செய்து காகித வடிவிலான லாட்டரி சீட்டுகளை விநியோகித்து வருகிறது.
சிக்கிம் லாட்டரி தொடர்பான பல மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கடந்த 2011ல் விசாரிக்கத் தொடங்கியது. இதில், மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் 2009 ஏப்ரல் முதல் 2010 ஆகஸ்ட்டுக்கு இடையே மாநில அரசை ஏமாற்றி ரூ.910 கோடி வருமானத்தை சட்டவிரோதமாக ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறைகள் விசாரணை நடத்தின.
இதையடுத்து நடைபெற்ற சோதனைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மார்ட்டினின் சொத்துகள் முடக்கப்பட்டன. இதுவரை மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.457 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி ஒருவர், ‘ஃபிச்சர் கேமிங்’ நிறுவனம் மிக நீண்ட காலமாகவே சிபிஐ, ஈடி, ஐடி போன்ற விசாரணை அமைப்புகளின் ரேடாரின் கீழ் இருந்து வருகிறது. எனவே, இதையும், தேர்தல் பத்திரங்கள் வாங்கியதையும் இணைத்துப் பார்க்க முடியாது,” என்றார்.
தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.6,060.51 கோடியும், ஒட்டுமொத்தமாக அங்கீகரிக்கப்பட்ட 22 மாநில அரசியல் கட்சிகளுக்கு ரூ.5,221 கோடியும் நன்கொடை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேசிய கட்சிகளில் பாஜகவுக்கு அடுத்ததாக காங்கிரஸ் (ரூ.1,421.86 கோடி), ஆம் ஆத்மி கட்சி (ரூ. 65.45 கோடி) உள்ளிட்ட கட்சிகள் அதிக நன்கொடை பெற்று முன்னிலை வகிக்கின்றன.
மாநிலக் கட்சிகளில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 1,609.53 கோடியும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சிக்கு ரூ.1,214.70 கோடியும் பிஜு ஜனதா தளத்துக்கு ரூ. 775.50 கோடியும் தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு ரூ.639 கோடியும் ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 337 கோடியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 218.88 கோடியும் கிடைத்துள்ளன.
இதற்கிடையே தேர்தல் பத்திரம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கருப்புப் பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரங்கள் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.