புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை மார்ச் 12 செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரம் வழங்கியது தொடர்பான விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், “தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தரவிறக்கம் செய்து, அவற்றை வகைப்படுத்தித் தருவது சிக்கலான நடவடிக்கை. எனவே, முழு விவரங்களை வெளியிடுவதற்கு ஜூன் 30ஆம் தேதிவரை கால அவகாசம் வேண்டும்,” என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி மார்ச் 4ஆம் தேதி மனுத் தாக்கல் செய்தது.
அந்த மனு திங்கிட்கிழமை (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது.
அப்போது, “இது மிகவும் எளிதான செயல். அது தெரிந்துதான் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டோம். இது ஒன்றும் புதிய வேலை கிடையாது. இதற்கு முன்பும் இதேபோன்ற வேலைகளை அவ்வங்கி செய்துள்ளது.
“பட்டியலை வெளியிடுமாறு நாங்கள் உத்தரவிட்டு 26 நாள்கள் ஆகிவிட்டன. இத்தனை நாள்களாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு காட்டமாகக் கேட்டது.
மேலும், “இணையம் உள்ள இந்தக் காலகட்டத்தில் தகவலைத் திரட்டுவது முடியாத செயலா என்ன? உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பை ஒரு வங்கியின் மேலாளர் ஒருவர் மேல்முறையீடு செய்து எதிர்க்கிறார் என்றால், இது மிகவும் தீவிரமான விஷயமாகும்,” என்றும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து, எஸ்பிஐ வங்கியின் கால அவகாசக் கோரிக்கையைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், “கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை செவ்வாய்க்கிழமை மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்பிஐ சமர்ப்பிக்கும் விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். விவரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் எஸ்பிஐ அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும்,” என்று கூறினர்.