பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள மத்தூரம்மா கோயில் 120 அடி உயர தேர் சாய்ந்தது.
இந்த அசம்பாவிதத்தில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
ஆனேக்கல் தாலுகா உஸ்கூரில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்தக் கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக நம்பப்படுகிறது.
இந்தக் கோவிலில் பங்குனி மாதம் தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் உஸ்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தேர்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் அந்தந்த கிராம தேவதைகள் மத்தூரம்மா தரிசனத்துக்காக இழுத்து வருவது வழக்கம்.
இதற்காக ஒவ்வொரு கிராமத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு தேரை வடிவமைத்து உஸ்கூருக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் இழுத்துக் கொண்டு வருவார்கள்.
ஒவ்வொரு தேரும் 20 ஜோடி காளை மாடுகள், 5 டிராக்டர்கள், 5 பொக்லைன் எந்திரங்கள், பக்தர்கள் மூலம் இழுத்து வரப்படும்.
சனிக்கிழமை அன்று இந்தக் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது.
இதையடுத்து சுற்றுவட்டார மக்கள் மத்தூரம்மா கோவிலுக்கு ஏழு தேர்களை அலங்கரித்து இழுத்து வந்தனர்.
ஏழு தேர்களை 150 காளை மாடுகள், 40 பொக்லைன் எந்திரங்கள், 50 டிராக்டர்கள் இழுத்து வந்தன. ஒவ்வொரு தேரும் சுமார் 120 அடி முதல் 130 அடி உயரம் கொண்டதாக இருந்தன.
இந்த நிலையில் உஸ்கூர் திருவிழாவுக்கு டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் இழுத்து செல்லப்பட்ட ஒரு தேரை ஹீலலிகே அருகே கம்மசந்திரா பகுதியில் ஒரு வளைவில் திருப்பியபோது அந்தத் தேர் ஒரு பக்கமாக சாயத் தொடங்கியது. அதனை கவனிக்காமல் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர்.
அப்போது திடீரென்று தேர் சாய்ந்து கண் இமைக்கும் நேரத்தில் கீழே விழுந்தது.
தேர் முழுமையாகக் கீழே விழுந்ததும் அப்பகுதியே புழுதி மண்டலமாகக் காட்சியளித்தது.
தேர் சாய்வதைக் கண்ட பெண்கள், குழந்தைகள், பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் எனப் பலரும் கூச்சலிட்டபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாரும் இதில் சிக்கவில்லை. ஆனால் ஓட்டம் பிடித்த சிலருக்கு காயம் ஏற்பட்டது.
காவல்துறை இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.