புதுடெல்லி: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்தத் தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்காவும் இஸ்ரேல் நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கான புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தங்களுடைய குடிமக்களை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அந்நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், ஈரான் வான்வெளியை தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தொலைவை கடந்து செல்ல வேண்டியுள்ளதாக விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.