புதுடெல்லி: பதற்றமான வாக்குச்சாவடிகள் நிறைந்த மேற்கு வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டடமாக மூன்று தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு நடைபெற்றது.
இம்மூன்று தொகுதிகளிலும் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு, தீவைப்பு உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் அரங்கேறின. இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவியது.
கூச் பெஹார், அலிபுர்துவார், ஜல்பைகுரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்தத் தொகுதிகளில் காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பித்ததுமே ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
இந்த தாக்குதலின்போது நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வீச்சு நடந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனந்த் பர்மன் என்ற உள்ளூர் பிரமுகர் பாஜக தொண்டர்களால் தாக்கப்பட்டு காயமடைந்தார். அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து மாநில அமைச்சர் உதயன் குஹா மருத்துவமனைக்குச் சென்று பர்மனிடம் நலம் விசாரித்தார்.
வாக்காளர்களை மிரட்டுவதுடன் அவர்களை வாக்குச்சாவடிகளுக்குள் வரவிடாமல் தடுப்பதாகவும் வாக்குச் சாவடி முகவரைத் தாக்கியதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
கூச் பெஹாரில் உள்ள டூஃபங்கஞ்ச், ஜல்பைகுரியில் உள்ள டப்கிராம் - ஃபுல்பாரி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கட்சியினரின் தேர்தல் அலுவலகங்கள் தீவைக்கப்பட்டன.
பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதை அடுத்து பதற்றம் கூடியது.
மூன்று தொகுதிகளில் கூச் பெஹார் தொகுதியில் அதிகளவிலான வன்முறை புகார்கள் எழுந்துள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.
அதோடு, “எங்களுக்கு ஒரு சில புகார்கள் வந்துள்ளன. ஆனால், இதுவரை வன்முறைகள் குறித்து எங்களிடம் எந்தப் புகாரும் இல்லை. வெள்ளிக்கிழமை மதியம் வரை 50% வாக்குகள் பதிவாகியிருந்தன,” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோல்கத்தாவில் இருந்தபடி வாக்குப்பதிவு களேபரங்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி கண்காணித்து வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு
இதற்கிடையே, மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள் பல முறை துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, வாக்காளர்கள் சிதறி ஓட்டம்பிடித்தனர். துப்பாக்கிச்சூட்டில் யாரேனும் பலியானார்களா என்பது குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சமூக ஊடங்களில் ஒரு காணொளிப்பதிவு வெளியாகி உள்ளது. அதில், வாக்காளர்கள் துப்பாக்கிச் சூட்டின்போது சிதறி ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.
இதேபோல் பிஷ்ணுபூர் தொகுதியில் வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தினர்.