புதுடெல்லி: மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஒன்றுக்கொன்று அவதூறு பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலிக் காணொளிகளை வெளியிட்டுள்ளன.
இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து ஆணையம் இதுபோன்ற காணொளிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் 3 மணி நேரத்திற்குள் நீக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘டீப் ஃபேக்’ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அண்மைக் காலமாகப் பல போலி காணொளிகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு உருவத்தின் மீது வேறொரு உருவத்தை வீடியோ எடிட்டிங் செய்து பதித்து ஆள்மாறாட்டம் செய்ய முடியும்.
அது மட்டுமின்றி ஒருவருடைய பேச்சை இன்னொருவரின் குரலில் வெளியிட முடியும். மக்களவை தேர்தல் நேரத்தில் இதுபோன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட பல காணொளிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் டீப் ஃபேக் காணொளிகள் பற்றிய புகார்களும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், உண்மைக்குப் புறம்பான, தவறான, திசைதிருப்பக் கூடிய, இழிவுபடுத்தக் கூடிய தகவல்கள் அடங்கிய டீப் ஃபேக் ஒலிப்பதிவு மற்றும் காணொளிகளைத் தயாரித்துப் பகிரும் செயலில் எந்த அரசியல் கட்சியும் ஈடுபடக் கூடாது.
டீப் ஃபேக் ஒலிப்பதிவுகளையும் காணொளிகளையும் இதுவரை வெளியிட்டுள்ள கட்சிகள் அடுத்த மூன்று மணி நேரத்துக்குள் அவற்றை இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளது.