நவம்பர் 10ஆம் தேதிக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஆப்பிள் இன்கார்பரேட்டட் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆயினும், “இன்னும் ஒன்று உள்ளது,” என்ற ஒரு வரியைத் தவிர அந்த நிறுவனம் வேறு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம், பல்வேறு புதிய ஐபோன் வடிவங்களை வெளியிட்டது. அத்துடன் புதிய ஆப்பிள் கைக்கடிகாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆண்டிறுதிக்குள் தனது சுய தயாரிப்பான ‘ஆப்பிள் சிகோன்’ சில்லுகளைக் கொண்டுள்ள புதிய மேக் மடிக்கணினிகள் வெளியீடு காணும் என்று ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதத்தின்போது தெரிவித்தது. அந்தக் கணினிகள் இந்த மாதம் வெளியீடு காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐபோன்களின் மின்சார சக்தி பயனீட்டைக் கட்டுப்படுத்தும் முக்கியமான சில்லுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் இந்தத் திறன்பேசிகளின் இருப்பு கடைகளில் குறையலாம் என சிலர் அனுமானிக்கின்றனர்.
4ஜி கைபேசிகளைக் காட்டிலும் 5ஜி கைபேசிகளில் 30 முதல் 40 விழுக்காடு அதிகமான சில்லுகள் (chip) தேவைப்படுவதாக ஆப்பிள் தயாரிப்புகளுக்காக சில்லுகளைத் தயாரிக்கும் தைவான் செமிகான்டக்ர்டஸ் நிறுவனம் தெரிவித்தது. ஹுவாவெய் நிறுவனம், செப்டம்பரின்போது நடப்புக்கு வந்த அமெரிக்க வர்த்தகத் தடைக்கு முன்னதாகவே அந்த சில்லுகளை வாங்கி வைத்திருந்தது இந்தப் பற்றாக்குறைக்குப் பங்களித்திருப்பதாக அந்நிறுவனம் கூறியது.