கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக உலகமே போராடிவரும் நிலையில் நம்மில் சிலர், இன்னும் கிருமியால் பாதிக்கப்படாமல் தப்பி வருகிறோம். சரி, கொவிட்-19 நமக்கு வந்துபோய்விட்டால் எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடும். நம் பாதுகாப்பு வளையத்தைச் சற்று கைவிடுவோமே என்று எண்ணுவோருக்கு, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் அலை அலையாய் வந்துபோய்விட்டன. இங்கு பத்தில் அறுவருக்காவது கொரோனா கிருமியால் குறைந்தது ஒரு முறை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற அமர்வின்போது சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
அத்துடன் அண்மைய காலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளான ஒருவர், மீண்டும் அதே கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கிருமித்தொற்று வராமல் தடுப்பதைவிட, அந்தக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு, எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிடலாம் என மக்கள் நினைத்துவிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.
"அறிகுறிகள் மிதமானதாக இருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இருக்கவே செய்கின்றனர்," என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் ஆய்வுத் துறை துணைத் தலைவர் இணைப் பேராசிரியர் அலெக்ஸ் கூக் கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் அபாயம் இருப்பதுடன் கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டவருக்குக் கிடைத்துள்ள எதிர்ப்பு சக்தி எத்தனை காலம் நீடிக்கும் என்பதும் நிச்சயமற்ற ஒன்றாக இருப்பதாக அதே பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் நட்டாஷா ஹாவர்ட் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, கொவிட்-19க்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கும் கிருமித்தொற்றால் நீண்டகால பாதிப்பு ஏற்படக்கூடும் என்கிறார் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் எஷ்லி செயிண்ட் ஜான்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு களைப்பு, நெஞ்சு வலி, சுவைக்கும் மற்றும் நுகரும் தன்மையை இழத்தல் போன்ற அறிகுறிகள் குறைந்தது இரு மாதங்களுக்கு நீடிப்பதே நீண்டகால பாதிப்பாகக் கருதப்படுகிறது.
எனவே, சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க கிருமித்தொற்றுக்குத் தங்களை ஆளாக்கிக்கொள்ளும் சாத்தியத்தை மக்கள் குறைப்பதே வழி என்கின்றனர் நிபுணர்கள்.
இந்நிலையில், கொள்ளைநோய்க்கு பிந்திய உலகிலும் முகக்கவசம் அணிவது தொடர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியும் வருகின்றனர்.
செய்தி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்