ஒவ்வொரு கலாசார விழாவையும் சுற்றி பல்வேறு நம்பிக்கைகளும் வழக்கங்களும் உள்ளன. அதேபோல சீனர்களும் பல்வேறு கிழக்கு ஆசிய நாட்டவர்களும் கொண்டாடும் சந்திரமுறைப் புத்தாண்டைச் சுற்றி பல வழக்கங்கள் உள்ளன.
சீனர்கள் சந்திரமுறைப் புத்தாண்டின்போது குடும்பத்தார், உறவினருடன் ஒன்றுகூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். புத்தாண்டுக்கு முந்திய நாளில் குடும்பத்தாருடன் விருந்து உண்பது அவர்களின் முக்கிய வழக்கங்களில் ஒன்று. குறிப்பாக சில அதிர்ஷ்ட உணவுவகைகள் சீனப் பெருநாள் விருந்துகளில் கட்டாயம் இடம்பெறும்.
மூங்கில் குருத்து, கரும்பாசி, ‘எக் ரோல்’ எனப்படும் முட்டை இனிப்பு வகைகள் போன்றவை வளப்பத்தின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன. கோழி, மகிழ்ச்சியையும் திருணத்தையும் குறிக்கின்றன.
மீன் ஆசைகளை நிறைவேற்றுவதில் உதவுகிறது என்பது சீனர்களின் நம்பிக்கை.
மீனுக்கான மாண்டரின் சொல், நிறைய என்ற சொல் போல ஒலிப்பதால் சீனர்கள் தங்கள் விருந்துகளில் மீனைச் சேர்த்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் விருந்துகளில் மீனை உண்டு முடிப்பதில்லை. அது அதிர்ஷ்டம் முழுவதையும் முடித்து விடுவதற்குச் சமம் என்று அவர்கள் கருதுவதால் தட்டில் சிறிது மீனை வைத்து விடுகின்றனர்.
முக்கியமாக மாண்டரின் ஆரஞ்சு எனப்படும் உரிக்கும் ஆரஞ்சுகள், செல்வம், தங்கம், அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் குறிக்கின்றன என்பது சீனர்களின் நம்பிக்கை.
அதனால் சீனர்கள் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் மாண்டரின் ஆரஞ்சுகளை வைப்பதுடன், உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கு வழங்குகின்றனர். அதுவும், மற்றவர்களுக்கு மதிப்பு தரும் வகையில் இரண்டு கைகளிலும் இரண்டு ஆரஞ்சுகளை வைத்து அளிப்பது சீனர்களின் வழக்கம்.
புத்தாண்டு நேரத்தில் பார்க்கும் அனைவருடனுடம் உரையாடி, அவர்களின் உடல்நலமும் வளமும் பெருக வாழ்த்துச் சொல்வது சீனர்களின் வழக்கமாகும்.
புத்தாண்டு என்றாலே பழையன கழிதலும் புதியன புகுதலும்தான். அதைக் குறிக்கும் வகையில் சந்திரமுறைப் புத்தாண்டுக்கு முன்னர் சீனர்கள் தங்கள் வீடு களைச் சுத்தம் செய்வர்.
வீட்டைச் சுத்தம் செய்யும்போது கடந்த 12 மாதங்களில் சேர்ந்த குப்பையை மட்டுமல்ல துரதிஷ்டத்தையும் துடைத்து ஒழிப்பதாக சீனர்கள் நம்புகின்றனர்.
சிவப்பு நிறம் சீனப் புத்தாண்டில் பிரதான இடம் வகிக்கிறது. வெற்றி, விசுவாசம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி ஆகியவற்றைச் சிவப்பு குறிப்பதாக நம்பும் சீனர்கள், அந்நிறத்தில் ஆடைகளை அணிவது வழக்கம். அத்துடன், வீட்டுக் கதவில் சிவப்பு அலங்காரங் களையும் தாள்களையும் அவர்கள் வைப்பர்.
மேலும், இளையவர்களுக்குச் சிவப்பு நிற ஹங் பாவ் உறைகளில் பணத்தை வைத்து அளிப்பது சீனர்களின் முக்கியமான வழக்கம். புத்தாண்டில் பணம் புழங்க வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. குறிப்பாக, $2, $4, $6, $8 என இரட்டைப் படையாகத் தான் பணத்தை வழங்க வேண்டும். நெருங்கிய சொந்தங்களுக்கும் பெரியவர் களுக்கும் அவர்கள் கூடுதல் பணத்தை வழங்குவர்.