ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் வட்டாரங்களின் கலாசார, வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்தும் நோக்கத்துடன் ‘க்லூ: கியூரியோசிட்டி’ எனும் தொழில்நுட்பக் கண்காட்சி ஜூரோங் வட்டார நூலகம், ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் திறந்துள்ளது.
ஜனவரி 29ஆம் தேதியன்று தொடங்கிய இக்கண்காட்சி, மார்ச் 28ஆம் தேதி வரை நடைபெறும். இக்கண்காட்சியை தேசிய நூலக வாரியம், தன் ‘லேப்25’ திட்டத்தின்கீழ் ‘அரசாங்கப் பொதுத் தயாரிப்புகள்’ (Open Government Products) அமைப்புடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
தேசிய நூலக வாரியம், சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், வரைபடங்கள் இக்கண்காட்சியைச் சாத்தியமாக்கியுள்ளன.
மக்கள் தங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட பயண வழிகாட்டியைத் தொடுதிரையிலும் திறன்பேசியிலும் காணலாம்.
இவ்வழிகாட்டி ‘கூகுல்’ வரைபடங்களோடு இணைந்துள்ளதால், மக்கள் அவ்விடங்களுக்கு நேரில் சென்று, வட்டாரத்தின் தொன்மையைப் பாராட்டலாம். புதிய உணவிடங்களுக்கும் அறிமுகமாகலாம்.
இக்கண்காட்சிக்கு அடுத்தபடியாக, மார்ச் மாதத்தில் ஒரு திறன்பேசிச் செயலியும் அறிமுகமாகும். இதன்வழி, ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் பகுதிகளைப் பற்றி மக்கள் தங்கள் விரல்நுனியில் தகவல் அறியலாம்.
“ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் - இந்த இரு இடங்கள் சிங்கப்பூரின் வரலாறு, கலாசாரத்தில் முக்கியம்வாய்ந்தவை. அதுமட்டுமல்லாமல், இவற்றைச் சார்ந்த ஆவணங்கள் அதிகமாக இருப்பதால் இவற்றைத் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் தேசிய நூலக வாரிய நூலகர் ஜமுனா.
“பல இடங்களுக்கு மீண்டும் சென்று, மேலும் அவற்றை நுண்ணியமாகப் பார்வையிடவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்படுகிறது,” என்றார் கண்காட்சியைக் கண்ட ஜூரோங் வட்டாரவாசி பாரத் செல்வம், 41.
“சுற்றுப்பயணிகளுக்கு சிங்கப்பூரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இது பெரிதும் கைகொடுக்கிறது,” என்றார் மலேசியாவிலிருந்து வந்த நிர்மலா தேவி, 48.
“சீன, ஜப்பானிய தோட்டப் படங்களைக் கண்டதும் சிறுவயதில் மீன் பிடிக்கச் சென்ற நினைவுகள் எழுகின்றன,” என்றார் ஜூரோங்கில் வளர்ந்த ஐவன் ஏப்ரஹேம் மைக்கேல், 38. மக்கள் தங்கள் வரலாற்றைப் போதிய அளவு பாராட்டுவதில்லை என்று சில சமயம் தனக்குத் தோன்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மக்களிடமிருந்து தற்போது பெற்றுவரும் கருத்துகளுக்கு ஏற்ப, இக்கண்காட்சியை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.