தங்களின் 30 ஆண்டுகால திருமண வாழ்க்கையைப் பல அழகான நினைவுகளுடன் கடந்து வந்துள்ளனர் விஜி-ரமேஷ் தம்பதி.
தனக்கு ஏழு வயதாக இருந்தபோது ரமேஷைச் சந்தித்தார் விஜி.
“நாங்கள் இருவரும் அண்டைவீட்டார். எங்கள் வீடு ஒரு தெரு தள்ளியே இருந்தது. என் கணவரும் சகோதரரும் பால்ய நண்பர்கள். அதனால், நான் சில நேரங்களில் அவரை என் வீட்டில் பார்த்ததுண்டு,” என்றார் விஜி.
10 வயதான ரமேஷ், விஜியின் மீது தீரா அன்பு கொண்டார். இருப்பினும், அதை எளிதில் வெளிப்படுத்தவில்லை.
“அவருடைய கவனத்தை ஈர்க்கப் பல வழிகளில் முயன்றேன். அவர் வீட்டின் அருகே மிதிவண்டியில் அடிக்கடி செல்வதும் அவர் முன்னால் வேடிக்கையாக நடந்து கொள்வதுமாக இருந்தேன். ஆனால், விஜி என்னைக் கண்டுகொள்ளவில்லை,” என்று புன்னகைத்தார் ரமேஷ்.
முகத்தைப் பார்த்துக் காதல் மலர்வது ஒருபுறம் இருக்க, இணையம் வழியாகவும் காதல் மலரலாம்.
‘மைக்ரோசாஃப்ட் இணைய ரிலே’ தொடர்பின் மூலம் தனது கணவர் வடிவேலனைச் சந்தித்தார் துர்கா தேவி. அப்போது அவருக்கு 17 வயதுதான்.
“அவர் எனக்கு நேர்மாறானவர். அவருடைய மென்மையும் அமைதியும் என்னை மிகவும் ஈர்த்தன.
“நாங்கள் இருவரும் பெரும்பாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அவரை விரும்புகிறேன் என்று ஒருமுறை அவரிடம் வெளிப்படுத்தியது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் எந்த ஓர் உறவையும் தொடங்குவதற்குமுன் முதலில் என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
“காதல் வாழ்க்கையில் உயர்வு இருப்பதுபோல் தாழ்வு ஏற்படும் சூழ்நிலைகளும் அதிகம்,” என்றார் துர்கா.
“ஒரே கூரையின்கீழ் வாழ்வது சற்று சவால்மிக்கதாக இருக்கும். சில சமயங்களில் சிறிய கருத்து வேறுபாடு ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் வாய்ப்பும் இருக்கும். எங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்ததால், சில நேரங்களில் புரிந்துகொள்ளுதல் கடினமாக இருந்தது,” என்றார் விஜி.
“எங்களுக்குப் பண நெருக்கடி இருந்தது. மேலும், திருமணமாகி முதல் மூன்று ஆண்டுகள் என்னால் கருத்தரிக்க முடியவில்லை. அது நெருக்குதல் தரும் ஒரு சூழ்நிலையாக இருந்தது.” என்று துர்கா கூறினார்.
தற்போது இந்தத் தம்பதியர் தங்கள் 11வது திருமண ஆண்டை மூன்று பிள்ளைச் செல்வங்களோடு கொண்டாடுகின்றனர்.
அன்பும் காதலும் காலத்தைக் கடந்து நவீனத்தை ஏற்றுக்கொண்ட வேளையில், பலரும் துர்கா-வடிவேலன் தம்பதியர் போல இணையத்தில் தங்கள் கணவர் அல்லது மனைவியைச் சந்தித்துள்ளனர்.
ஒரு சிலர், விஜி-ரமேஷ் தம்பதியினர்போல நேரில் சந்தித்து ஒரு தனிச்சிறப்பான உறவை வளர்த்துக் கொள்வதுண்டு. இதில் எது சரி, எது தவறு என்ற வாதத்திற்கு இடமில்லை.
“இந்த நவீன காலத்தில், இணையம் வழி ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பது சாதாரணமாகிவிட்டது. இதில் சுவாரசியமும் அடங்கியுள்ளது. உங்களுக்குப் பிடித்த நபரை இணையம் வழி கண்டுபிடிப்பதில் தவறில்லை,” என்கிறார் விஜி.
“இணையம் வழியே தொடர்பு கொள்ளுதல், ஓர் ஆழ்ந்த புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இதனால் இருவருக்கும் இடையே எதிர்பார்ப்புகள் குறையும். எந்தவிதத்திலும் ஏமாற்றம் இருக்காது,” என்றார் துர்கா.
சிறு கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க அறிவுறுத்துகின்றனர் விஜியும் ரமேஷும். மனதுக்குப் பிடித்தவருடன் வாழ்க்கை எனும் கடலைக் கடந்தால் அன்பும் காதலும் எளிது என்று நம்புகின்றனர் துர்காவும் வடிவேலனும்.
முகத்தைப் பார்த்து மலரும் அன்பு, இணையம்வழி இருமனம் இணைந்து பரிமாறும் அன்பு இவ்விரண்டும் சற்று வேறுபட்ட அனுபவங்களாக இருப்பினும், அடிப்படையில் அந்த அன்பு ஈடுகொடுக்க முடியாத ஓர் உணர்வு என்றால் அது மிகையில்லை.