சிறுபான்மை இனத்தவராக அல்லது சமயத்தவராக இருந்தாலும் சிங்கப்பூரில் ஒவ்வொருவருக்கும் குரல் உள்ளது என்று ஆத்மார்த்தமாய் நம்புவதாக திரு சந்திர மோகன் மருதன், 59, தெரிவித்திருக்கிறார்.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் முழுநேர சேவையாளராகப் பணியாற்றியபோது தம் 23ஆம் வயதில் தொண்டாற்றத் தொடங்கினார் திரு சந்திரமோகன்.
“பிறருக்கு அடிக்கடி உதவி செய்யும் என் பெற்றோர், என் மனதுக்குள் பரிவை விதைத்தனர். சமூகச் சேவையிலும் சமயச் சேவையிலும் காட்டிய ஈடுபாடு காலப்போக்கில் கூடிக்கொண்டு போனது,” என்று அவர் கூறினார்.
தொடர்புகளையும் தொழில்நுட்பத் திறன்களையும் தொடர்ந்து வளர்த்ததால் தாம் அதிகம் நாடப்பட்டு வந்ததாக திரு சந்திர மோகன் கூறினார். 2012ல் இந்து அறக்கட்டளை வாரியத்தில் சேவையாற்றத் தொடங்கிய பின்னர் அவர், சிங்கப்பூரில் நல்லிணக்கத்தைப் பேண முற்படும் ஹார்மனி சர்க்கலில் சேர அந்த அமைப்பினரால் அழைக்கப்பட்டார்.
மேரிமவுண்ட் வட்டாரத்திற்கான ஹார்மனி சர்க்கல் பிரிவில் திரு சந்திரமோகன் தலைவராக 2019ல் நியமிக்கப்பட்டார். இவர் மேலாண்மை காணும் பிரிவின்கீழ் 11 சங்கங்களும் அமைப்புகளைச் சேர்ந்த மொத்தம் 30 பேரும் உள்ளனர்.
“காலாண்டுதோறும் நாங்கள் சந்தித்து இன, சமய நல்லிணக்கத்தை மேலும் வளர்ப்பதற்கான திட்டங்கள் குறித்து யோசிப்போம். சமயத் தலைவர்கள் ஒருவரோடு ஒருவர் இணைப்புகளை உருவாக்கும் வாய்ப்புகளாக இந்தச் சந்திப்புகள் அமைகின்றன,” என்று அவர் கூறினார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஹார்மனி சர்க்கல் அமைப்பின் ஒருங்கிணைப்பு மன்றத்தில் உறுப்பினராகத் திரு சந்திரமோகன் கடந்தாண்டு நியமிக்கப்பட்டார். “இந்த ஒருங்கிணைப்பு மன்றம், 93 ஹார்மனி சர்க்கல் கிளைகளை வழிநடத்துகிறது,” என்றார் அவர்.
இன, சமய நல்லிணக்க நாளாக ஜூலை 21ஆம் தேதி காலங்காலமாக சிங்கப்பூரில் கொண்டாட்டப்பட்டு வந்தாலும் கடந்தாண்டு ஜூலையை முதன்முறையாக சமய நல்லிணக்க மாதமாக அறிவித்தது ‘ஹார்மனி சர்க்கல்’ அமைப்பு. “ஜூலைதோறும் நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளையும் கேளிக்கை நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்வோம்,” என்று அவர் கூறினார்.
அண்மையில் நடந்த சிங்கே அணிவகுப்பின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராகவும் இருந்து இளையர்களின் கூடுதல் பங்கேற்புக்குக் குரல் கொடுக்கிறார் இவர். தொண்டூழிய சேவையில் அறச்சிந்தை மிக்க பலரைச் சந்திப்பதாகக் கூறிய திரு சந்திரமோகன், தம்மை மேலும் தொண்டு செய்யும்படி 90 வயது தொண்டூழியர் ஒருவர் கூறியதை அவர் நினைவுகூர்ந்தார்.
தொண்டூழிய வாழ்க்கைமுறையை தம் குடும்பத்தினர் தொடர்ந்து ஆதரிப்பதை எண்ணி திரு சந்திரமோகன் மகிழ்கிறார். “ஒரு நிகழ்ச்சிக்கு உதவுவேன் என்று உறுதியளித்தால் இயன்றவரை என் சொல்லைக் காப்பாற்றுவேன். இதனால் சில நேரங்களில் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போகிறது,” என்று அவர் கூறினார். திரு சந்திரமோகனுக்குத் துணையாக இப்போது அவரது 22 வயது மகன் தொண்டூழியத்தில் இறங்கியுள்ளார்.