இந்தியாவில் தியானம் கற்றுக்கொண்ட ஜப்பானிய இசைக் கலைஞர்

இந்தியாவில் தியானம் கற்றுக்கொண்ட ஜப்பானிய இசைக் கலைஞர்

2 mins read
8c2ad6f7-8875-4795-98f4-eae23eda444a
ஜப்பானிய இசைக் கலைஞர் கித்தாரோ. - படம்: ஏபிஆர்டபிள்யூ

இயற்கையின் அழகை உணர்ந்து இசையமைக்கும் ஜப்பானிய இசைக் கலைஞர் கித்தாரோ, இயற்கையிலிருந்து தொடர்ந்து இசையைக் கற்று வருவதாகக் கூறுகிறார்.

“தகவல்களையும் கற்பனை உணர்வையும் தரும் இயற்கையிலிருந்து கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக உள்ளது. இயற்கையின் இசையைத் தொடர்ந்து கேட்கையில், மனத்திலிருந்து இசையை உருவாக்கும் தெம்பைப் பெறுகிறேன்,” என்று தமிழ் முரசுக்கு அளித்த பேட்டி ஒன்றில் திரு கித்தாரோ கூறினார்.

‘கிரேமி’ மற்றும் ‘கோல்டன் குளோப்’ விருதுகளைப் பெற்ற இவர், வரும் ஜூன் 25, 26ஆம் தேதிகளில் மேடையேறவிருக்கிறார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்கு வந்துள்ள இவர், மரினா பே சேண்ட்ஸ் அரங்கில் இசை நிகழ்ச்சி படைக்கவுள்ளார்.

செவ்விசை, ஜாஸ், ராக் எனப் பல இசை வகைகளின் கலவையாக உள்ள இவரது இசையின் இனிமை, உலகெங்கிலும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

புத்த சமயத்தையும் ஜப்பானிய பாரம்பரிய வழிபாட்டு முறையான ஷின்டோவையும் தம் குடும்பம் பின்பற்றியதாகக் கூறிய திரு கித்தாரோ, தம் இசையில் இரண்டு சமயங்களின் கூறுகளும் இருப்பதாகக் கூறினார். “ஷின்டோ இயற்கையுடன் தொடர்புடையது. புத்த சமயம் தத்துவம் நிறைந்தது. இரு கூறுகளுமே என் இசையில் இருப்பதை உணர்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இளம் வயதில் இந்தியாவின் புனே நகரில் தியானம் செய்ய கற்றுக்கொண்டதாகக் கூறும் திரு கித்தாரோ, அங்கு இந்திய ஆன்மிக உணர்வுகளைப் பெற்றதாகக் கூறினார்.

“கலைமகளின் சக்தியை உணர்ந்தேன். சரஸ்வதியின் நடனம் என்ற தலைப்பிலான பாட்டை உணர்ந்த அனுபவம் உந்துதலாக இருந்தது,” என்றார் திரு கித்தாரோ.

சித்தார், தம்புரா, தபேலா போன்றவற்றையும் கற்று இந்த இசையில் தம் படைப்புகளையும் இணைத்திருப்பதாக இவர் கூறினார்.

வெங்கெலிஸ், ஜான் லென்னன், செய்ஜி ஒஸாவா உள்ளிட்ட இசை மேதைகளுடன் நட்பு கொண்டுள்ள திரு கித்தாரோ, தற்கால இசையில் அவர்கள் ஆழமான சுவடுகளைப் பதித்திருப்பதாகப் புகழ்ந்தார்.

உலகத்தை ஓசை பாதிக்கும் என்பதால் இசையமைப்பாளர்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்கிறார் இவர்.

குறிப்புச் சொற்கள்