பொறந்த பூமி
பொழுதுகளா
பொத்தி வளர்த்த
உறவுகளா
பட்டணம் போயி
பணந்தேடி!
பட்டிக் காட்டை
மறந்தீகளா
வெட்டிப் போட்ட
விழுதுகளில்!
முட்டிப் பார்க்கும்
துளிர்ப்புகளா
உன்...
கிராமத்தாயி
தேடுகிறாள்!
எட்டிப் பார்க்கத்
தோணலையா?
உணர்வாய் இருக்கும்
உறவுகளின்
உரிமைப் பேச்சை
மறந்தீகளா
ஊரில் நடக்கும்
நிகழ்வுகளை
போனில் மடுத்தே
கடப்பீகளா!
ஊத்துக் கொட்டிய
கேணிகளும்!
காத்துக் கிடக்குது
பலநாளா!
வசந்தங் காட்டிய
வயற் காடும்
அசந்து கிடக்குது
முள்காடா!
ஓடித்திரிந்த
வீதிகளும்!
அமர்ந்து பேசிய
பொது இடமும்
பள்ளிக்கால
நிகழ்வுகளும்
பருவம் தந்த
நினைவுகளும்
உருவமின்றிப்
போனாலும்
கரைய மறுத்ததே
கற்கண்டாய்!
இனித்துக் கொண்டே
இப்பொழுதும்
கரையைத் தழுவும்
அலையெனவே!
தகர்ந்து போன
மணற்குடிலாய்
தவிச்சுக் கிடக்குது
தாலாட்ட!
தூரம்போன
உறவுகளே!
தேருக்காவது
வருவீகளா
அம்மங்கோயில்
பெருநாளும்
அடுத்தவர் சொல்ல
அறிவீகளா!
கார்த்திகைத் திருநாள்
மறந்தீகளா
காளை பிடியும்
மறந்தீகளா
பழநிக் காவடி
மறந்தீகளா
பால்க்குடத் திருநாள்
மறந்தீகளா
பண்டிகைப் பொழுதும்
பட்டணமா
பணத்தை சேர்ப்பதில்
சிக்கனமா?
பார்த்திட வாங்க
உறவேன்னு
வெத்தலை பாக்கு
வைக்கனுமா?
எந்த நிகழ்வு
ஆனாலும்
கூடிக்காக்கும்
உணர்வுகளா
அந்தக் கால
பொழுதெல்லாம்
மாறிப் போச்சோ
கனவுகளா
காகிதப் பணமும்
ஆயுதமோ
தேடிடச் சொல்லி
தொலைக்கிறதா
நாடிய நகரத் தாய்மடியும்
நகராய், இருடா என்கிறதா
பிரிந்து வாழும்
உறவுகளே
பொறந்த பூமி
தவிக்கிறது!
மலர்ந்த பூமி
மறந்தவரை
மகிழ்வு பொங்க
அழைக்கிறது!
போனா போகுது
நமக்கென்ன
பொழுதைப் போக்க
போறீகளா?
இளமைக் காலம்
தொலைச்சிகளே
முதுமை கழிக்க
வருவீகளா
உன்...
பிஞ்சுப் பாதங்களை
பிரியமோடு தாங்கிய
கிராமக் கிறுக்கி!
நீ...எப்போது வருவாயென
ஏங்கிக் கிடக்கிறாள்!
தேடலின் இடைஇடையே
தேடி வருகவே!
தேவைகள் தீர்ந்ததெனில்
கூடி வாழ்கவே!
எதிர்பார்ப்புடன்...
உங்கள்
தாயைப்போல்
பல தாய்க் கிராமங்கள்!
கொன்னைபட்டி.பழநிமுருகன்.சி