கோலாலம்பூர்: மலேசியாவின் நான்கு மாநிலங்களில் மழை வெள்ளம் மோசமடைந்துள்ளது.
ஏறத்தாழ 36,000 பேர் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜோகூர் மாநிலம் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பத்து மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு செகாமட் மாவட்டம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு மழை வெள்ளத்தால் இருவர் உயிரிழந்தனர்.
நேற்று முன்தினம் 78 வயது திருவாட்டி லீ அமோ யீ, 74 வயது டான் சூ கெ இருவரும் அவரவர் வீட்டில் சிக்கிக்கொண்டு உயிரிழந்ததாகக் குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.
நீர்மட்டம் திடீரென்று அவர்கள் வீட்டுக் கூரை அளவிற்கு உயர்ந்ததாக செகாமட் காவல்துறை தெரிவித்தது.
குளுவாங், பத்து பகாட், கோத்தா திங்கி, மூவார் ஆகிய மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குளுவாங்கில் கடந்த புதன்கிழமை ஒருவர் காரில் மாண்டு கிடக்கக் காணப்பட்டார். காருடன் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஜோகூரை அடுத்துள்ள பாகாங், மழை வெள்ளத்தால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது மாநிலம். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 2,000 பேர், 30 துயர்துடைப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இன்று (03-03-2023) காலை நிலவரப்படி, நெகிரி செம்பிலானில் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1,000 பேர் தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலாக்காவிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80லிருந்து 140க்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சரவாக் மாநிலத்தில் 43 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர், பாகாங், திரங்கானு, சராவாக் ஆகிய மாநிலங்களில் இன்றுவரை கடுமையான மழை தொடரும் என்று மலேசிய வானிலை மையம் முன்னுரைத்துள்ளது.