கோலாலம்பூர்: ஊழல்வாதிகள் இடம்பெறாத சுத்தமான அமைச்சரவையை ஏற்படுத்த பிரதமர் முகைதீன் யாசின் உறுதிபூண்டுள்ளார். தாம் ஏற்படுத்தி உள்ள பெரிக்கத்தான் நேஷனல் அல்லது தேசிய கூட்டணிக்கு அம்னோ ஆதரவு வழங்கியபோதிலும் அதன் உயர்மட்டத் தலைவர்களுக்கு புதிய அமைச்சரவையில் இடமில்லை என்பதை திரு முகைதீன் மறைமுமாக உணர்த்தி உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் எட்டாவது பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட அவர், நேற்று முன்தினம் இரவு வானொலியில் உரை நிகழ்த்தினார்.
“திறமையும் ஒற்றுமையுணர்வும் மிக்க, ஊழல் கறை படியாதவர்களையே அமைச்சரவையில் சேர்ப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். லஞ்ச ஊழலற்ற அரசாங்கத்தையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஒருமைப்பாட்டை ஓங்கச்செய்வதற்கும் நல்லாட்சிக்கும் எனது அரசாங்கம் முன்னுரிமை அளிக்கும்,” என்று திரு முகைதீன் தமது உரையில் குறிப்பிட்டார்.
அவர் இவ்வாறு கூறியதன் மூலம் அம்னோ தலைவர் அகமது ஸாஹித் ஹமிடிக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் முகைதீன் அமைச்சரவையில் இடமில்லை என்பது தெளிவாகி உள்ளது.
திரு அகமது ஸாஹித் ஹமிடி 87 ஊழல் குற்றச்சாட்டுகளையும் திரு நஜிப் 42 ஊழல் குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கி உள்ளனர். இவர்களைப்போலவே அம்னோவின் பெரும்பாலான தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தன.
ஊழலில் திளைத்த பழைய முகங்களை அமைச்சரவையில் சேர்க்கக்கூடாது என்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார் என உயர்மட்டத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஊழல் காரணமாக 2018 பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவிய அம்னோவின் தலைமைக்கு முக்கியத்துவம் தந்துவிடுவாரோ என்னும் ஐயத்தைப் போக்க முகைதீன் இவ்வாறு செய்வது அவசியம் என்கிறார் அவர்.
ஆயினும் முகைதீன் அணியில் இருக்கும் சில ஆதரவுக் கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அம்னோ தலைவர்களை அமைச்சரவையில் சேர்க்க பல நல்ல காரணங்கள் இருப்பதாக வாதிடுகின்றன. பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் அமைச்சர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் மீதான ஊழல் வழக்குகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டதை பாஸ் கட்சி தலைவர் ஹாடி அவாங் உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட லிம் குவான் எங் மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள அப்போதைய தலைமைச் சட்ட அதிகாரி முடிவெடுத்ததையும் அவர் தெரிவித்துள்ளார்.