பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசுவை 4வது மாடியிலிருந்து கீழே வீசிய அதன் தாய் கைது செய்யப்பட்டார். அந்த 18 வயது பெண் பயத்தால் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டது.
மலேசியாவின் பெர்சியரான் மயாங் பாசிர் 5 பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் கீழ்த்தள வீட்டின் நேற்று முன்தினம் (மே 13) காலை 8 மணியளவில் பால்கனியில் ஏதோ பொருள் விழுவதைக் கண்ட அந்த வீட்டுக்காரர் பைக்குள் பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் கிடந்ததைக் கண்டார்.
அவர் உடனடியாக போலிசைத் தொடர்புகொண்டதை அடுத்து, போலிசாரும் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
குழந்தை பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மண்டையோட்டில் கீறல் விழுந்ததுடன் மூளை மற்றும் கல்லீரலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் பினாங்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது அந்தக் குழந்தை.
போலிசார் அந்தக் குடியிருப்பில் வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டை மேற்கொண்டதில் அந்தக் குழந்தையின் தாய் பிடிபட்டார்.
காலை சுமார் 7 மணியளவில் குளியல் அறையில் குழந்தை பிறந்ததாகவும் அது வீட்டில் இருந்த தமது சகோதரிகளுக்கும் கிளந்தானில் இருக்கும் தமது பெற்றோருக்கும் தெரியாது என்றும் அந்தப் பெண் குறிப்பிட்டார்.
அந்தப் பெண் கருவுற்றிருந்தது அவரது பெற்றோருக்குத் தெரியாது என்றும், குழந்தை பிறந்ததை குடும்பத்தாரிடமிருந்து மறைக்க எண்ணி குழந்தையை அந்தப் பெண் வீசியதாகவும் கூறப்பட்டது.
அந்தப் பெண்ணின் 18 வயது ஆண் நண்பரை போலிசார் கைது செய்துள்ளனர். கடை ஒன்றில் உதவியாளராகப் பணிபுரியும் அந்த இளைஞர் நேற்றிரவு 8.40 மணியளவில் பாயான் பாரு காவல் நிலையத்தில் சரணடைந்தார் என்று கூறப்படுகிறது.
அந்த இளையர் பேராக் மாநிலத்தின் கம்போங் பாடாங் பெக்குவாய் பகுதியைச் சேர்ந்தவர் என தென்மேற்கு மாவட்ட போலிஸ் தலைமை கண்காணிப்பாளர் அன்பழகன் தெரிவித்தார்.
தற்போது பாயான் லெப்பாசில் வசிக்கும் அந்த இளையர், கீழே எறியப்பட்ட குழந்தையின் தாயுடன் வசித்து வருவதை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்பட்டது.
குழந்தையைக் கைவிட்டதற்கான குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 317ன்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online