மலேசியாவில் அண்மைய நாட்களில் மூன்று தடுப்புக்காவல் நிலையங்களில் புதிய கிருமித்தொற்று குழுமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு முறையான ஆவணங்கள் வைத்திருக்காமல் மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்கியுள்ளனர்.
மலேசியாவில் ஊரடங்கு நடப்பில் இருந்த சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 2,000 வெளிநட்டினர் இந்த மாதத்தில் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையங்களில் பொதுவாக நெரிசல் அதிகமாக உள்ளது. ஒரே அறையில் பலர் தங்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
சுகாதாரப் பராமரிப்பைப் பொறுத்தவரை, வெளிநாட்டினரிடம் பாரபட்சமாக நடந்துகொள்ளக்கூடாது; அவர்களுக்கு உரிய மருத்துவ கவனிப்பு அளிப்பதுடன், நிலையங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் நிர்வாக இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.
அந்த நிலையங்களில் இருப்போரிடையே கிருமித்தொற்று கண்டவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இன்று புதிதாக 172 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள், குடிநிழைவு நிலையங்களில் இருக்கும் வெளிநாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டது.
மலேசியாவின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை 7,417ஆகியுள்ளது.
கொவிட்-19ஆல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக உள்ளது.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 60 பேர் புக்கிட் ஜலில் தடுப்புக் காவல் நிலையத்தில் இருப்போர். 49 பேர் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் இருப்போர். இவ்விரு தடுப்புக் காவல் நிலையங்களிலும் முறையே சுமார் 1,400 மற்றும் சுமார் 1,600 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செபாங்கில் உள்ள நிலையத்தில் ஆறு பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தடுப்புக் காவல் நிலையங்களில் கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மலேசியர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் நிலையங்களிலேயே இருக்கின்றனர் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று கேட்டுக்கொண்டார்.
இந்த மூன்று தடுப்புக் காவல் நிலையங்களிலும் உள்ள, உரிய ஆவணங்களின்றி மலேசியாவில் தங்கியிருக்கும் 4,342 வெளிநாட்டினருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.