கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவி (படம்) உயிருடனும் நலமுடனும் இருப்பதாக அவரது அலுவலகம் தெளிவுபடுத்தி உள்ளது. உடல்நலமில்லாத காரணத்தால் அவர் உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அது மறுத்துள்ளது.
80 வயதான திரு அப்துல்லா 2009ஆம் ஆண்டு பிரதமர் பதவியிலிருந்து விலகியது முதல் வெளியுலக நடவடிக்கைகளிலிருந்து பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வந்தார்.
ஆகக்கடைசியாக 2018ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்குமுன் அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். விவேகத்துடன் வாக்களிக்கும்படி அவர் வாக்காளர்களை அப்போது கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் திரு அப்துல்லா அகமது படாவி விருந்து நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார் என்றும் அவர் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் பெர்னாமா நிறுவனம் அப்போது செய்தி வெளியிட்டிருந்தது.