கோலாலம்பூர்: கொரோனா கிருமித்தொற்றுக்கான புதிய சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகள் இறுதி செய்யப்படும் வரை வெளிநாட்டினர் மருத்துவச் சிகிச்சைக்காக மலேசியாவின் பினாங்கிற்கு வரத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக பினாங்கில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகாமல் இருந்த நிலையில், அங்கு கடந்த வார இறுதியில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் தலைதூக்கியதையடுத்து அதிகாரிகள் அங்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தனர்.
இந்தோனீசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை புற்றுநோய் நோயாளிகள் இருவரும் உடனடி சிகிச்சை தேவைப்பட்ட ஒருவரும் சிறப்பு விமானத்தின் மூலம் பினாங்கு வந்ததாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகளின் வருகை குறித்து தனது தரப்புக்குத் தகவல் தெரிவிக்கப்படாதது மாநில அரசுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக பினாங்கு முதல்வர் சௌ கோன் இயோ தெரிவித்தார்.
கொரோனா கிருமிப் பரவல் உள்ள இந்த காலகட்டத்தில் பினாங்கில் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டு நோயாளிகளை அனுமதிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ கூடாது என்ற நிலைப்பாட்டில் மாநில அரசு தொடர்ந்து உறுதியாக உள்ளது என்றும் அவர் சொன்னார்.