சமூக ஊடகங்களில் தமக்கு எதிராகப் பரப்பப்படும் தகவல்களைக் கண்காணித்து தமது பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி திருவாட்டி ரோஸ்மா மன்சூர், 69, பணம் செலவழித்ததாக நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதற்காக 2012ஆம் ஆண்டு இணையத் தற்காப்புக் குழு ஒன்றுக்குப் பணம் வழங்கப்பட்டதாக திருவாட்டி ரோஸ்மாவின் முன்னாள் உதவியாளர் கூறியிருப்பதாக மலாய் மெயில் இணையச் செய்தி குறிப்பிட்டது.
ரைஸால் மன்சூர் எனப்படும் அவர், திருவாட்டி ரோஸ்மாவுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் நேற்று சாட்சியமளித்தார்.
“இணையம் வழியாக தமக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் எதிர்கருத்து அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தக் குழுவிடம் தரப்பட்டு இருந்தது,” என்று கூறிய திரு ரைஸால், அந்த வேலைகளைச் செய்ய அக்குழுவிடம் தருமாறு அப்போது மாதாமாதம் 100,000 (S$32,800) ரிங்கிட் தம்மிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சோலார் திட்டத்தை அளிக்க ஜேபாக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் 187.5 மில்லியன் கோரிய குற்றச்சாட்டை திருவாட்டி ரோஸ்மா எதிர்நோக்குகிறார்.