மலேசியாவில் கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க மூன்று கட்டங்களாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தபோது அந்நாட்டின் கட்டுமானத் துறைக்கு 18.5 பில்லியன் ரிங்கிட் (S$6.1 பி.) இழப்பு ஏற்பட்டதாக பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மார்ச் 18க்கும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கும் இடையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதலிரு கட்டங்கள் நடப்பில் இருந்தபோது கட்டுமானத் துறைக்கு 11.6 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் மூன்றாம் கட்டத்தின்போது 6.9 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக திரு ஃபடில்லா தெரிவித்தார்.
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் முதல் மூன்று கட்டங்கள் 47 நாட்கள் நீடித்தன. அப்போது மருந்துக் கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள் போன்ற அத்தியாவசிய சேவைத் துறையில் இயங்கும் வர்த்தகங்கள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ரயில்வே திட்டங்கள் முதல் வீட்டு புதுப்பிப்புப் பணிகள் வரை அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
அதைத் தொடர்ந்து மலேசியாவில் கிருமிப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து, நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்கீழ் மே 4 முதல் ஒரு சில தொழில்துறைகள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
ஏப்ரல் 20 முதல் இம்மாதம் 20ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7,590 கட்டுமானத் தளங்களில் கட்டுமானத் துறை வளர்ச்சிக் கழகம் நடத்திய பரிசோதனையில், 1.96 விழுக்காடு கட்டுமானத் தளங்கள் பணி நடைபெறாதது தெரியவந்ததாக திரு ஃபடில்லா கூறினார்.
இன்னமும் 149 தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், பணிகளைத் தொடர்வதில் சில கட்டுமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சந்திப்பதாகச் சொன்னார்.