மலேசிய அரசியலில் அடுத்த சில வாரங்களில் என்ன நடக்கும் என்பதை மூவர் தீர்மானிக்கக்கூடும்.
அதில் இருவருக்கு மலேசியாவின் பிரதமர் ஆக வேண்டுமென விருப்பம்; ஒருவர் ஏற்கெனவே இருமுறை பிரதமராக இருந்தவர்.
அம்னோ தலைவர் ரஸாலி ஹம்சா, எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் பிரதமர் பதவியைக் கைப்பற்ற நினைக்கையில், அவர்களில் ஒருவருக்கு டாக்டர் மகாதீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கு லி என பலராலும் அறியப்படும் திரு ரஸாலியும் டாக்டர் மகாதீரும் இணைந்து திரு அன்வாரின் பிரதமர் கனவைக் கலைக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.
இருவரும் இணைந்து திரு அன்வாரைத் தோற்கடிக்க முயற்சி செய்வதாக ஊடக ஆலோசகர் அஸ்மி அன்ஷார் குறிப்பிட்டார்.
பொதுவான எதிரிக்கு எதிராக இருவரும் கைகோத்திருப்பதாகப் பலரும் குறிப்பிடுகின்றனர். டாக்டர் மகாதீர், அவரது மனைவி, திரு கு லி ஆகிய மூவரும் கைகோத்தபடி நிற்பதைக் காட்டும் புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
திரு ரஸாலியும் டாக்டர் மகாதீரும் முன்பு எதிரெதிர் கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு சமநிலையில் இருப்பவர்கள்.
கடந்த மார்ச் மாதத்தில் டாக்டர் மகாதீர் சமர்ப்பித்த கடிதத்தின் அடிப்படையில் தற்போதைய பிரதமர் முகமது யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை விரைவில் நிறைவேற்றுமாறு ரஸாலி வெளியிட்ட கடிதம் குறிப்பிடுவதையும் திரு அஸ்மி சுட்டிக்காட்டினார்.
அரசியல் கட்சிகள், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ‘ஒன்றுபட்ட அரசாங்கத்தை’ உருவாக்க திரு கு லி திட்டமிடுவதாக அஸ்மி குறிப்பிடுகிறார்.
இந்நிலையில், பிரதமர் முகைதீன் தலைமையிலான தேசிய கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்னோ, தமது கட்சிக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது.
தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு அம்னோவுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்றத்தின் உறுப்பினர்களில் ஒருவரான தாஜுதீன் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளை உள்ளடக்கி ஆட்சிமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் முக்கிய கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைகளை வழங்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நாட்டை மற்றொரு முறை நிச்சயமற்ற அரசியல் சூழலை உருவாக்க வேண்டாம் என மலேசிய அரசியல் தலைவர்களிடம் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.