மலேசியப் பெண் எம்.இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் முகம்மது ரிதுவான் அப்துல்லாவைக் கைது செய்யவும் அவர்களின் இளைய மகள் பிரசன்னா தீக்சாவை மீட்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யும்படி மலேசிய போலிசுக்கு ஈப்போ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதுவானைக் கைது செய்து, தீக்சாவை மீட்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் போலிஸ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என 2014ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
“ஆனால், 2014 மே 30ஆம் தேதியில் இருந்து நீதிமன்றத்தில் போலிஸ் எந்தவோர் அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை,” என்று திருவாட்டி இந்திராவின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் கூறினார். அவ்வகையில், போலிஸ் இதுவரை 79 முறை நீதிமன்ற உத்தரவின்படி நடக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
2009ஆம் ஆண்டில் முஸ்லிமாக மாறிய ரிதுவான், திருவாட்டி இந்திராவின் ஒப்புதலின்றி தங்களின் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாம் சமயத்திற்கு மாற்றினார். ஆனால், பிள்ளைகளின் மதமாற்றம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
முதலிரு பிள்ளைகளும் திருவாட்டி இந்திராவுடன் வசிக்கும் நிலையில், அப்போது 11 மாதக் குழந்தையாக இருந்த தீக்சாவை ரிதுவான் தம்முடன் கொண்டு சென்றுவிட்டார். இதையடுத்து, தம் மகளை மீட்டுத் தருமாறு திருவாட்டி இந்திரா நீதிமன்றத்தை நாடினார்.