மலேசியாவின் சாபாவில் கொரோனா தொற்றுப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொவிட்-19ன் புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய A701B வகை கொரோனா கிருமியா அது என்பது இன்னும் தெரியவில்லை என அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட வகையைப் போல இது இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சாபாவின் பென்டெங் லஹட் டட்டு குழுமத்தில் இருந்து எடுக்கப்பட்ட 60 பரிசோதனை மாதிரிகளில் இந்த வகை கிருமி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே பரவும் கொவிட்-19ஐவிட இக்கிருமி கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கெடாவில் பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகளில், பொதுவான கொவிட்-19க்கு காரணமான கிருமியைவிட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய D614G வகை கிருமி கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து மலேசியாவுக்குச் செல்வோருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமித்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்படுவோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். கிருமித்தொற்று இருப்பவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.