மலேசியாவில் மோசமாகப் பரவும் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஊரடங்கோ, ராணுவ ஆட்சியோ இல்லை என நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார் பிரதமர் முகைதீன் யாசின்.
தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் வழியாக நாட்டு மக்களிடம் உரையாடிய பிரதமர் முகைதீன், தற்சார்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அவசரநிலை பிரகடனம் மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு, பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசியலில் அண்மைக்காலமாக நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அரசாங்கம் பரிந்துரைத்த அவசரநிலை முன்மொழிவை மாமன்னர் அப்போது நிராகரித்தார். ஆனால், நாடாளுமன்றத்தை ரத்து செய்வது, திடீர்த் தேர்தல் நடைபெறுவதைத் தடுப்பது ஆகியவற்றைச் செய்யவே பிரதமர் அந்தப் பரிந்துரையை முன்வைத்ததாக எதிர்க்கட்சிகள் பலவாறாக விமர்சனம் செய்தன.
அவசரநிலை நடப்பில் இருக்கும் காலகட்டத்தில் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அமர்வுகள் போன்றவை இருக்காது என்று இன்று பிரதமர் முகைதீன் குறிப்பிட்டார். ஆனால், கொவிட்-19 நெருக்கடி கட்டுக்குள் வந்த உடன் பொதுத்தேர்தலை நடத்த கடப்பாடு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை, மாநில நிர்வாக மன்றங்கள், அரசாங்கச் சேவைகள் போன்றவை வழக்கம்போல் தொடர்ந்து செயல்படும் என்றார் அவர்.
மலேசியாவில் அவசரநிலை - முக்கிய குறிப்புகள்:
- இவ்வாண்டு ஜனவரி 11 முதல் ஆகஸ்ட் 1 வரை நடப்பில் இருக்கும். கொவிட்-19 கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தற்சார்பு குழு பரிந்துரைத்தால் முன்னதாகவே மீட்டுக் கொள்ளப்படலாம்.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தொடர்ந்து நடப்பில் இருக்கும். ராணுவ ஆட்சி இல்லை.
- ஊரடங்கு இல்லை.
- நாடாளுமன்ற அல்லது மாநில சட்டமன்ற அமர்வுகள் இல்லை.
- தேர்தல் இல்லை.
- அமைச்சரவை, மாநில நிர்வாக மன்றங்கள், பொதுச் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.
- சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் பொருளியல் நடவடிக்கைகள் வழக்கம்போல தொடரும்.
- பொது மருத்துவமனைகளின் சிரமத்தைத் தணிக்க, தனியார் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை அரசாங்கம் வசப்படுத்திக்கொள்வது உட்பட ஆணைகளை மாமன்னர் அவசரநிலையின்போது விதிக்க முடியும்.