மலேசியாவின் பேராக் மாநில பள்ளிக்கூட வளாகத்தினுள் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த வேலியை சேதப்படுத்தியது.
கிரிக் நகர் அருகே ஆர்பிஎஸ் கெமர் தேசிய பள்ளி வளாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது. வேலியைச் சேதப்படுத்தி வளாகத்திற்குள் நுழைந்த யானை விளையாட்டுத் திடலில் அங்குமிங்கும் அலைந்ததாகவும் இச்சம்பவத்தால் யாருக்கும் காயமில்லை என்றும் பேராக் வனவிலங்கு பூங்காத் துறை இயக்குநர் யூசோப் ஷாரிஃப் கூறினார்.
பள்ளிக்கூட மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் பாதுகாப்புக்காக யானை போன்ற விலங்குகள் நுழைந்துவிடாது தடுக்கும் பொருட்டு மின்சாரம் பாயும் வேலி அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதையும் மீறி யானை உள்ளே நுழைந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து வேலியின் மின் ஆற்றலை அதிகப்படுத்தும் வேலை நடைபெறுகிறது.
பள்ளிக்கூட வகுப்பறைகளுக்கு வெளியே யானை நடந்துசெல்வதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.