மலேசியா அதன் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கட்டாய கொவிட்-19 பரிசோதனைத் திட்டத்தை வரும் செவ்வாய்க்கிழமை முதல் தேசிய அளவில் விரிவுபடுத்த இருப்பதாக அந்நாட்டு மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பணியாற்றும் ஏறத்தாழ 800,000 வெளிநாட்டு ஊழியர்கள் இத்திட்டத்திற்கு உட்படுத்தப்படுவர் என்று கூறிய அவர், நோய்த்தொற்று அபாயத்தை எதிர்நோக்கும் நான்கு மாநிலங்களிலும் கோலாலம்பூர், லெபுவான் ஆகிய இரு கூட்டரசுப் பிரதேசங்களிலும் இத்திட்டம் கவனம் செலுத்தும் என்றார்.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, சாபா ஆகியவை அந்த நான்கு மாநிலங்கள்.
மலேசியாவில் ஏறக்குறைய இரண்டு மில்லியன் வெளிநாட்டு ஊழியர்கள் சட்ட ரீதியாக பணியாற்றுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகள், தோட்டங்கள், கட்டுமானத் தளங்கள் போன்றவற்றில் பாதுகாவல் ஊழியர்களாகவும் அலுவலகத் துப்புரவுப் பணியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.