தீவிரவாதச் சிந்தனையுடன் செயல்பட்ட 34 வயது மலேசிய ஆடவருக்கு உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 15) மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்த முகம்மது ஃபிர்தவுஸ் கமால் இன்ட்ஸாம் மீது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான பொருட்களை வைத்திருந்தது தொடர்பில் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்த ஆடவர் வைத்திருந்த பொருட்களில் இரண்டு ‘மெமரி கார்டு’கள், நாட்டுக் கொடி ஒன்று, நான்கு புத்தகங்கள், ஒரு கைபேசி ஆகியவை அடங்கும்.
ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தின் சுங்கச்சாவடிகள், குடிநுழைவு, தடைக்காப்பு வளாகத்து வருகையாளர் பகுதியில் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று காலை 10.40 மணியளவில் அந்த ஆடவர் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
வழக்கறிஞர் இல்லாமல் நீதிமன்றத்தில் முன்னிலையான ஃபிர்தவுஸ், சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், ஆடவர் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
(மேல் விவரம் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)