பெட்டாலிங் ஜெயா: அடுத்த மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் தைப்பூசத் திருநாள் வருகிறது என்றாலும் அதற்கு ஒருவாரத்திற்கு முன்பிருந்தே பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.
மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் பக்தர்கள் கடந்த வார இறுதியிலேயே பால்குடம் எடுத்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றியதைக் காண முடிந்தது.
வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமைவரை கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதனைத் தவிர்க்க இப்போதே பக்தர்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றத் தொடங்கிவிட்டதாக பத்துமலை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகத் தலைவர் என்.சிவகுமார் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் கோவிலுக்கு வருவர் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
இதேபோன்று, ஒன்றரை மில்லியன் பக்தர்கள் வரக்கூடும் என்றும் இந்தோனீசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் வரலாம் என்றும் பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.