நாட்டுக்குள் நுழையும் அனைத்துலகப் பயணிகளில் 2 விழுக்காட்டினரிடம் விமான நிலையங்களில் குத்துமதிப்பாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை தொடங்கப்படும் என்று இந்தியாவின் சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை (டிசம்பர் 22) இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனா உள்ளிட்ட நாடுகளில் உருவெடுத்துள்ள பிஎஃப்.7 என்னும் புதிய வகைக் கிருமி இந்தியாவில் நால்வரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை படிப்படியாக உயருவதற்குள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க பல மாநிலங்கள் தயாராகி வருகின்றன.
நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கிய டாக்டர் மாண்டவியா, “உலகளவிலான கொள்ளை நோய் அபாயம் இன்னும் முற்றுப் பெறவில்லை. கொள்ளைநோய்க் கிருமி அவ்வப்போது தனது வடிவத்தை மாற்றி வருகிறது.
“புத்தாண்டு உள்ளிட்ட விழாக்காலம் நெருங்குவதால் விழிப்புடன் கண்காணிப்பில் ஈடுபடுமாறு எல்லா மாநிலங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
“முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்குமாறு மாநில அரசாங்கங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன,” என்றார் அவர்.
இந்தியாவில் தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 153 பேரிடம் கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை. இருப்பினும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற பல உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து காணப்பட்டனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மகாலுக்குள் நுழைய கொவிட்-19 பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதமர், முதல்வர்கள் தனித்தனியாக ஆலோசனை
கிருமிப் பரவல் நிலைமை பற்றி ஆராய உயர்மட்டக் கூட்டம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை மாலை கூட்டி இருந்தார்.
அதேபோல தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதர சில மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது மாநில கொவிட்-19 நிலவரம் குறித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.