உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 38வது இடத்துக்கு சரிந்துள்ளார் இந்தியத் தொழிலதிபர் கெளதம் அதானி. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் அவரது சொத்து மதிப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.
“அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது, அதற்கு மிக அதிக கடன் உள்ளது,” என்று அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது.
அது அதானி குழுமத்துக்கு பலத்த அடியாக அமைந்தது. இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் சரசரவென்று சரிந்து வருகின்றன. இதனால், உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் வரை முன்னேறிய அதானி, ஒரே மாதத்தில் 38வது இடத்துக்குச் சரிந்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் இதழின் நிகழ்நேர கண்காணிப்பின்படி, அதானியின் சொத்து மதிப்பு US$33.4 பில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை ஜனவரி 24ஆம் தேதி வெளியிடப்படுவதற்கு முன்னதாக, அதானியின் சொத்து மதிப்பு US$119 பில்லியனாக இருந்தது.
இந்நிலையில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு அதானியைவிட இருமடங்கு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி தற்போது எட்டாவது இடத்தில் உள்ளார்.