எஸ் பாஸ் மற்றும் வேலை அனுமதிச் சீட்டு (ஒர்க் பெர்மிட்) ஊழியர்களுக்கு அவர்களின் முதலாளிகள் ஏற்படுத்தித் தரவேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையின் அளவு ஜூலை 1 முதல் உயருகிறது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் $15,000 வரை காப்பீடு கோரப்படும் தொகை $60,000க்கு அதிகரிக்கும்.
இந்தப் புதிய நடைமுறை பணிப்பெண்களின் முதலாளிகளுக்கும் பொருந்தும். மருத்துச் செலவுகள் அதிகரிக்கும் நிலை யில், தங்களது பணிப்பெண்களுக்கும் ஊழியர்களுக்கும் முதலாளிகள் செலுத்த நேரிடும் மருத்துவக் கட்டணங் களைக் குறைக்க புதிய நடைமுறை உதவும் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஐந்து விழுக்காடு வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவக் கட்டணங்கள், தற்போதைய $15,000 என்னும் மருத்துவக் காப்பீட்டுக் கோரல் வரம்பை தாண்டியுள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
இதனால், ஆண்டுக்குச் சராசரியாக 1,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்த அதிகச் செலவை எதிர்நோக்குவதாக மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.
அதிக மருத்துவக் காப்பீட்டுக்கு ஏற்பாடு செய் வதோடு, மருத்துவக் கட்டணத்திற்கான கோரிக்கை விடுக்கப்படும்போது, மொத்த கோரிக்கையில் முதல் $15,000 கழித்தது போக எஞ்சியுள்ள தொகையில் 25 விழுக்காட்டை முதலாளிகள் தரவேண்டும் என்பதும் புதிய விதி.
உதாரணமாக, இதய அறுவை சிகிச்சைக்கு $60,000 கோரிக்கை விடுக்கும் நிலையில், அதில் $15,000 கழித்த பின் எஞ்சியுள்ள $45,000ல் 25%, அதாவது $11,250ஐ முதலாளிகள் செலுத்த வேண்டும். எஞ்சியுள்ள $48,750க்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்கும்.