பாரிஸ்: உலகின் முன்னணிக் காற்பந்து ஆட்டக்காரரான அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி (படம்) வரும் ஜூன் மாதத்துடன் பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பிஎஸ்ஜி) குழுவிலிருந்து வெளியேறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் 36 வயதை எட்டும் மெஸ்ஸி, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒரு குழுவுடன் பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அண்மையில் ஏஎஃப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.
“மெஸ்ஸியுடனான ஒப்பந்தம் முடிவாகிவிட்டது. மெஸ்ஸி அடுத்த பருவத்தில் சவூதியில் விளையாடுவார்,” என்று பெயர் கூற விரும்பாத ஒருவரைச் சுட்டி, அச்செய்தி குறிப்பிட்டு இருந்தது.
பிஎஸ்ஜி குழு இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிஎஸ்ஜி உடனான மெஸ்ஸியின் பயணம் ஜூன் மாதத்துடன் முடிவிற்கு வரவுள்ளதாகத் தெரிகிறது.
“மெஸ்ஸியின் ஒப்பந்தத்தை பிஎஸ்ஜி நீட்டிக்க விரும்பினால் அது முன்னதாகவே நடந்திருக்கும்,” என்று அக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த பருவத்தில் மெஸ்ஸி எந்தக் குழுவிற்காக விளையாடவுள்ளார் என்பதை இன்னும் அவர் முடிவுசெய்யவில்லை என்று அவரின் தந்தையும் முகவரும் கூறியுள்ளனர்.
இதனிடையே, சவூதி சென்றதற்காக இருவாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட மெஸ்ஸி, இன்று அஜக்சியோ குழுவிற்கெதிரான பிரெஞ்சு லீக் ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.