தஞ்சோங் பகாரில் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் காணாமல் போனார். ஃபியுஜி செராக்ஸ் டவர்ஸ் கட்டடம் இடிக்கப்படும்போது ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் ஊழியர் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் தகவல் கிடைத்து அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் ஊழியரை மீட்கும் பகீரத முயற்சியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பாளர்கள், மீட்புப் பணியாளர்கள், அவசரகால மருத்துவ சேவை ஊழியர்கள் உட்பட எழுபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஏறக்குறைய 11 அவசரகால வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
மரினா பே தீயணைப்பு நிலையத்தின் அதிகாரிகள், பேரிடர் உதவி மீட்புக் குழுவைச் சேர்ந்த மீட்பு நிபுணர்கள் மற்றும் இரண்டு மோப்ப நாய்கள் காணாமல்போன ஊழியரைத் தேடியதாக குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் குறிப் பிட்டார்.
பெரிய விபத்துகளில் மீட்பு வேலை களுக்குப் பயன்படுத்தப்படும் குடிமைத் தற்காப்புப் படையின் ‘எம்டிஏ’ சிறப்பு வாகன மும் சம்பவ இடத்தில் காணப்பட்டது.
அய்க் சன் டிமாலிஷன் அண்ட் இன்ஜினியரிங் என்ற நிறுவனம் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டது.
அந்நிறுவனத்தின் பிரதிநிதியுடன் தொடர்புகொண்டபோது, இடிபாடுகள் சரிந்ததற்கான காரணத்தை அறிய அவகாசம் தேவை என்றார்.
கட்டடத்தின் ஒரு பகுதி சரிந்துவிழுந்தபோது பெரிய சத்தம் எழுந்தது. ஆனால் இது வழக்கமான சத்தம் என்று எண்ணி அருகில் இருப்பவர்கள் அக்கறை காட்டவில்லை.
“முதலில் சத்தம் கேட்டபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் என் வேலை இடத்தில் உள்ளவர்கள் கட்டடம் இடிந்து விழுந்ததைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர். அதில் ஒருவர் சிக்கியுள்ளார் என்றும் கூறினர்,” என்று அருகில் உள்ள கட்டடத்தில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
காணாமல்போன ஊழியரை நேற்று மாலை வரை கண்டுபிடிக்க முடியவில்லை.