லக்னோ: இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் மாதத்தில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி தொடங்கும் என்று அறிவித்துள்ளார்.
சென்ற ஞாயிற்றுக் கிழமை அவர் தனது சொந்த தொகுதியான லக்னோவுக்குச் சென்றார்.
அங்கு கோமதி நகரில் நடைபெறும் ரயில்வே நிலையக் கட்டுமான பணிகளை அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.
“கோமதி நகர் ரயில் நிலையப் பணிகள் திருப்தி அளிக்கின்றன. லக்னோவில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும். ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படும் இந்த சூப்பர்சோனிக் ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தரைப்பகுதிகளில் இருந்தும் ஏவ முடியும்,” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆய்வுக் கூட பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.
லக்னோவில் இன்னும் 11 திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்னும் 5 ஆண்டுகளில் லக்னோ முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றார் அவர்.
“ராணுவத் தளவாட உற்பத்திக்கு ஏற்ற சூழலை உத்தரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் உருவாக்கியுள்ளோம். உ.பி.யில் பாதுகாப்பு தளவாட வளாகம் உருவாக்குவதற்கு 1,700 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணியில் 95 விழுக்காடு நிறைவடைந்து விட்டன,” என்று அவர் கூறினார்.