நாக்பூர்: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் 38 வயது ஆடவருக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.
ஒரு மணி நேரம் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. இருந்தாலும், மருத்துவர்கள் போராடி அவரின் இதயத்தைத் துடிக்கவைத்துவிட்டார்கள்.
உடனடியாக செயற்கை சுவாச சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அந்த ஆடவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 45 நாள் அவர் தீவிரக் கண்காணிப்பின்கீழ் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு முற்றிலும் குணமடைந்து அக்டோபர் 13ஆம் தேதி வீடு திரும்பினார்.
அந்த ஆடவருக்கு 45 நிமிடம் இதயமீட்பு இதய சிகிச்சை (சிபிஆர்) அளிக்கப்பட்டதாக டாக்டர் லோகியா என்ற மருத்துவர் தெரிவித்தார்.
அந்த ஆடவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறார். அவருக்குச் சில நாள்களாகவே இதயப் பகுதியில் எரிச்சல் இருந்து வந்தது.
மருத்துவமனைக்குச் சென்ற வழியில் திடீரென அவர் மயங்கி விழுந்துவிட்டார். அவருடைய இதயம் துடிப்பது முழுவதுமாக நின்றுவிட்டது.
இருந்தாலும், திறமையாகச் செயல்பட்ட மருத்துவர்கள் அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைத்து சாதனை நிகழ்த்தி இருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.