திட்டமிட்டு வாகன விபத்துகளை அரங்கேற்றி அதன்மூலம் மில்லியன் கணக்கான தொகையைக் காப்புறுதியாகப் பெறுவதற்கு உதவியதாக ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் நேற்று 74 மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. முன்னாள் விநியோகிப்புப் பணியாளரா'கப் பணியாற்றிய 37 வயது ரஹ்மத் முகமது, தன் மீது சுமத்தப்பட்ட 25 ஏமாற்ற உடந்தையாக இருந்தது, ஏமாற்றத் தூண்டியது போன்ற குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இவருக்கு தண்டனை வழங்கும்போது இவர் மீது இருந்த குற்றச்சாட்டுகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. திட்டமிட்டு ஏமாற்று வேலைகளை அரங்கேற்றும் 29 பேர் கொண்ட கும்பலுக்காக அகமது வேலை பார்த்து வந்தார்.
2011 மே மாதம் முதல் 2013 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 16 காப்புறுதி நிறுவனங்கள் ஏமாற்றப்பட்ட சம்பவங்களில் இவருக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்படு கிறது. மோசமான வாகனக் காப்புறுதி தில்லுமுல்லு வேலைகளில் இவர் பலதரப்பட்ட வகையில் பங்காற்றியிருக்கிறார் என தீர்ப்பு வழங்கும்போது மாவட்ட நீதிபதி லோ வீ பிங் கூறினார். மோசடி வேலைகளில் ஈடுபட்ட அந்தக் கும்பலுக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட அகமது, போலியான ஓட்டுநர்களையும் பயணிகளையும் நியமித்து காப்புறுதிப் பணம் பெறுவதில் தில்லுமுல்லு செய்தார். ஒரு முறை பாதிக்கப்பட்ட பயணியைப் போல் நடித்து 52,000 வெள்ளி காப்புறுதிக் கோரலுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்தப் பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. சொத்துச் சேதம் குறித்து 44 முறையும் தனிப்பட்ட காயங்களுக்காக 70 முறையும் $1.14 மில்லியன் காப்புறுதி கோரிய மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளார். மோசடி செயல்களுக்கு தூண்டுகோலாக இவர் செயல்பட்டதால், காப்புறுதி நிறுவனங்கள் $215,678 இழந்துள்ளன.