அறிமுக இயக்குநர் கிஷன்ராஜின் ‘எமகாதகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கௌதம் வாசுதேவ் மேனனின் கடன் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார்.
“இன்றைக்கு எத்தனையோ சின்ன பட்ஜெட் படங்கள் தயாராகி, சென்சார் போர்டின் ஒப்புதலும் பெற்று வெளியீடு செய்யமுடியாமல் தவிக்கின்றன. மிகப்பெரிய படமான ‘துருவ நட்சத்திரம்’ படம் கூட வெளியீடு செய்ய முடியாத அளவுக்குப் பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. அதற்குக் காரணம் படத்தின் இயக்குநர் கௌதம் மேனனுக்கு இருக்கும் ஏறத்தாழ ரூ.60 கோடி கடன்தான்” என்றார் கே.ராஜன்.
கௌதம் வாசுதேவ் மேனன் படங்களுக்கு என தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. தொடர்ச்சியாக படங்கள் இயக்கி, முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழும் அவருக்கு எல்லாத் தகுதியும் திறமையும் இருந்தாலும் இரு குறைகள் காரணமாக பிரச்சினைகளில் சிக்கி அல்லல்பட்டு வருகிறார்.
“முதலாவதாக, முழுமையான கதையுடன் (ஸ்கிரிப்ட்) அவர் படப்பிடிப்புக்குச் செல்வதில்லை. உத்தேசமாக ஒரு கதையை யோசித்து படப்பிடிப்பைத் தொடங்கி, எடுக்கிற காட்சிகளுக்கேற்ப கதையை வளர்த்துச் செல்வது அவரது பாணி.
“இதனால், முற்பகுதியில் அருமையாகச் செல்லும் திரைக்கதையும் படப்பிடிப்பும் பிற்பகுதியில் குழப்பமாகி திக்குத்தெரியாமல் ஓடி மோதி நிற்கும். இதன் காரணமாக படப்பிடிப்பு நாள்கள் அதிகமாகி செலவும் அதிகரித்து தர்ம சங்கடமாகிவிடுகிறது.
“இரண்டாவது, அவர் வாங்கிக் குவித்திருக்கும் கடன். இதனால் அவர் மட்டுமின்றி அவரை நம்பி நடித்தவர்கள், இயக்கியவர்கள், பணம் போட்டவர்கள் என எல்லாரும் பாதிக்கப்படுகின்றனர். அவர் தயாரித்த நரகாசூரன் தொடங்கி அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம்வரை இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்,” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.