வெலிங்டன்: நியூசிலாந்து அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம், 2026ல் மின்சாரத்தில் இயங்கும் விமானத்தை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இத்தகைய விமானத்தை இயக்கும் முதல் விமான நிறுவனமாக அது அமையும்.
அமெரிக்காவின் ‘பேட்டா டெக்னாலஜிஸ்’ நிறுவனத்திடம் மின்கலனில் இயங்கும் விமானத்தை வாங்கவிருப்பதாக அது கூறியது.
முதலில் சரக்கு விமானமாக அது சேவை வழங்கும். நியூசிலாந்து அஞ்சல் சேவையுடன் இணைந்து, பொட்டலங்கள், கடிதங்கள் ஆகியவற்றை உள்நாட்டிற்குள் கொண்டுசெல்ல அந்த விமானம் பயன்படுத்தப்படும்.
அத்தகைய விமானச் சேவை தொடங்கப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மின்விமானம் 12 மீட்டர் நீளமும் மூன்று டன்கள் எடையும் கொண்டது. மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் 3,000 மீட்டர் வரையிலான உயரத்தில் அது பறக்கும்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் அதை முழுமையாக மின்னூட்டம் செய்ய இயலும். வழக்கமான விமானங்களைப்போலவே அதை இயக்கி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல முடியும்.
வர்த்தகப் பயன்பாட்டில் அடுத்த தலைமுறை விமானத்தை ஈடுபடுத்திய முதல் நிறுவனமாக விளங்குவது நோக்கம் என்று ஏர் நியூசிலாந்து தெரிவித்தது.
கடந்த மே மாதம், ஸ்கேண்டினேவியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், 2028ல் மின்சாரத்தில் இயங்கும் பயணிகள் விமானம் சேவையைத் தொடங்கும் என்று அறிவித்திருந்தது.