வயதான தாயாரைத் தாக்கி அவரது மூக்கை உடைத்த மகனுக்கு ஏழு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முஹமட் காலித் முஹமட் யாகோப், 58, ‘ஸ்கிசோஃப்ரினியா’ மனக்கோளாறால் பாதிக்கப்பட்டவர். மனநலக் கழகத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிறிது காலம் அவர் சிகிச்சைக்கும் செல்லவில்லை, மருந்துகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் 78 வயது தாயாரை அவர் கடுமையாகத் தாக்கினார். இதில் வயதான மாதின் மூக்கு எலும்பு முறிந்தது.
டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் அவருக்கு ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சம்பவத்திற்குப் பிறகு மனநலக் கழகத்தில் அவரது நிலை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. தாயாரை அவர் தாக்கியபோது அவருக்கு மீண்டும் ‘ஸ்கிசோஃப்ரினியா’ கோளாறு திரும்பியிருப்பது தெரியவந்தது.
நீதிமன்ற விசாரணையின்போது பேசிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெல்லி இங், மருத்துவரின் கூற்றுப்படி காலித்தின் குற்றத்திற்கும் அவரது மனநிலைக்கும் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
காலித், 1979ஆம் ஆண்டிலிருந்தே தனது மனக்கோளாற்றுக்கு மனநலக் கழகத்தில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். 2016 வரை வெளிநோயாளி சிகிச்சைக்கான முன்பதிவுகளுக்கு அவர் தவறாமல் சென்று வந்தார்.
ஆனால் 2017க்கும் பிறகு மருத்துவமனை சிகிச்சைக்குச் செல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வதையும் நிறுத்திவிட்டார். அதற்கான காரணம் நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்படவில்லை.
ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று படுத்திருந்த தாயாரை எழுப்பி உட்கார வைத்து அவர் பல முறை முகத்தில் குத்தினார். வயதான மாது வலியால் துடித்தபோதும் அவர் நிறுத்தவில்லை. காலித் தாக்குதலை நிறுத்தியபோது வெளியே ஓடிய மாது உதவிக்குக் குரல் கொடுத்தார். இரவு 10.20 மணியளவில் அண்டை வீட்டுக்காரர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
காலித்தின் தாயார், மூக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுக்காக கூ டெக் புவாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.