சிங்கப்பூரின் கம்ஃபர்ட் டெல்குரோ நிறுவனம் ‘ஏ2பி ஆஸ்திரேலியா’ என்னும் டாக்சி கட்டமைப்பு நிறுவனத்தின் எல்லா பங்குகளையும் வாங்கப்போவதாகத் தெரிவித்து உள்ளது.
ஆஸ்திரேலிய டாக்சி நிறுவனமான ‘ஏ2பி’, தனிநபர் போக்குவரத்துத் துறையில் மின்னிலக்கம்வழி பணம் செலுத்துவதற்கான தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது.
ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள அந்நிறுவனம், ‘13கேப்ஸ்’ மற்றும் ‘சில்வர் சர்விஸ்’ என்னும் பெயரிலான டாக்சி சேவைகளுடன் ‘கேப்சார்ஜ்’ என்னும் மின்னிலக்கப் பணம் செலுத்துதல் சேவையையும் அளிக்கிறது.
கம்ஃபர்ட்டெல்குரோவும் அதன் ஆஸ்திரேலிய துணை நிறுவனமான ‘ஸ்வான் டாக்சிஸ்’ நிறுவனமும் ஏ2பியில் 9.3 விழுக்காட்டுப் பங்குகளை வைத்துள்ளன.
எஞ்சியுள்ள பங்குகளையும், பங்கு ஒன்றுக்கு 1.45 ஆஸ்திரேலிய டாலர் என்னும் விலை கொடுத்து வாங்குவது பற்றி கம்ஃபர்ட் டெல்குரோ பரிசீலித்து வருகிறது.
அந்தப் பங்குகளின் மொத்த மதிப்பு 165.1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$145.7 million). அதன் பின்னர், ஏ2பி நிறுவனம் முழுமையாக கம்பஃபர்ட் டெல்குரோ வசம் வந்துவிடும்.