தன் இரு கிளிகள் மீதும் கொண்ட அலாதி அன்பினால் அவற்றுக்குச் சூட்டிய பெயரிலேயே பலகார வர்த்தகம் தொடங்கியுள்ளார் சோஃபியா ரதி, 33.
‘காக்கடைல்’ (Cockatiel) எனும் இனத்தைச் சார்ந்த இக்கிளிகளை, ஈராண்டுகளுக்கு முன்பு, தேசிய தினத்தன்றும் தன் கணவர் குரு ஜெயாவின் பிறந்தநாளன்றும் வாங்கினார் சோஃபியா.
‘நொய்நொய்’ என்று சத்தமிடுவதால் மூத்த கிளிக்கு அப்பெயரையும் எதுகை மோனைக்காக இளைய கிளிக்கு ‘பொய்பொய்’ என்றும் பெயரிட்டனர் அவரும் குடும்பத்தினரும்.
நாளடைவில் குடும்ப உறுப்பினர்களாகவே மாறிவிட்டன இக்கிளிகள். அவற்றின் அடையாளம் என்றென்றும் நிலைத்திருக்கவேண்டும் என்று விரும்பிய சோஃபியா, அவற்றின் பெயரில் அண்மையில் இவ்வர்த்தகத்தைத் தொடங்கினார்.
வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட இரு கிளிகளும் நல்ல கூட்டணியாகத் திகழ்வதால் அவற்றின் பெயர்களை இணைத்து ‘நொய் & பொய்’ எனத் தன் வர்த்தகத்திற்குப் பெயரிட்டார் இவர்.
“’நொய்நொய்’ தன்னம்பிக்கையுடைய கிளி. எங்கள் மனநிலையைப் புரிந்து நடந்துகொள்ளும். வீட்டில் ஏதேனும் வாக்குவாதம் ஏற்பட்டால் எங்களை சமாதானப்படுத்தும்.
“‘பொய்பொய்’ மிகவும் திறன்மிக்கது. புதிய ‘விசில்’ சத்தங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ளும். நடனமாடும், பாடும். கொஞ்சம் கூச்ச சுபாவம். ஆனால் நல்ல சூழலில், யார் வந்தாலும் அது தன் வித்தைகளைச் செய்துகாட்டும்,” என்கிறார் சோஃபியா.
வர்த்தகம் நன்றாக நடைபெறாத நாள்களில் மனந்தளராமல் இருத்தலையும் புதியனவற்றைக் அறியும் உந்துசக்தியையும் தன் கிளிகளிடமிருந்து கற்றுக்கொள்வதாகக் கூறுகிறார் சோஃபியா.
தன் கிளிகளின் மனப்பாங்கு என்றுமே 2, 3 வயதுக் குழந்தைக்குச் சமமாக இருக்கும் என்பதால் முன்பு ஆரம்பக்கல்வித் துறையில் பணியாற்றிய இவருக்கு இன்றும் அச்சூழலில் தொடர்ந்து இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
இக்கிளிகள் தன் வர்த்தகத்திற்கும் குடும்பத்திற்கும் அதிர்ஷ்டம் கொண்டுவருவதாகவும் இவர் கருதுகிறார்.
“எங்கள் குடும்பத்தில் அனைவருக்குமே பறவைகள் என்றால் கொள்ளைப் பிரியம். என் தந்தைக்கும் பறவைகளுக்கும் ஒரு தனிப் பிணைப்பு உண்டு. எத்தகைய பறவையானாலும் என் தந்தையிடம் எளிதில் நண்பராகிவிடும்,” என்கிறார் சோஃபியா.
கிறிஸ்துமசுக்காக நான்கு வகை குக்கீஸ்களைத் தன் வணிகத்தின் அடையாளமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் சோஃபியா. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புதிய வகையைத் தயாரிக்கத் திட்டமிடுகிறார். அவற்றை @noipoicookies எனும் ‘இன்ஸ்டகிராம்’ தளத்தில் காணலாம்.
சிறுவர்களுக்கு தன் குக்கீஸ் மிகவும் பிடித்திருப்பதால், வருங்காலத்தில் தன் கிளிகளையும் பலகாரங்களையும் மையமாகக் கொண்டு ஒரு சிறுவர் கதைப்புத்தகத்தை வெளியிட விரும்புகிறார் சோஃபியா. செயற்கை நுண்ணறிவுப் படங்களையும் அதில் பயன்படுத்த எண்ணம் கொண்டுள்ளார்.
“எனக்கு என்றுமே வர்த்தகம் தொடங்கவும், நூல் எழுதவும் ஆசை இருந்தது. ஆனால் எதன் அடிப்படையில் தொடங்குவது எனத் தெரியாமல் இருந்தது. என் கிளிகள் வந்ததும் இதற்கு வழி பிறந்துள்ளது,” என்கிறார் இவர்.
தன் கிளிகள், குடும்பத்தின் ஆதரவால் வர்த்தகம் தொடர்ந்து மலரும் என நம்புகிறார் சோஃபியா.